சனி, 12 ஏப்ரல், 2014

கலிங்கத்துப்பரணி

கலிங்கத்துப்பரணி , பரணி எனப்படும்
தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு நூல்.
குலோத்துங்கன் என்னும் சோழ மன்னனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்டது. அனந்தவன்மன்
என்னும் வட கலிங்க மன்னன்
திறை கொடாமலிருந்த பிழையின்
காரணமாக முதலாம் குலோத்துங்க
சோழனின் படைத்தலைவனும்
அமைச்சனுமாயினாயிருந்த கருணாகரத்
தொண்டைமான் கி.பி. 1112 ஆம்
ஆண்டில் போரில் வென்ற
செய்தியே நூற்பொருள். இது
செயங்கொண்டார் என்னும்
புலவரால் இயற்றப்பட்டது.

இவர்
தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார்.
இந்நூலின் காப்புச் செய்யுளால்
இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என
அறியலாம்.

இதற்கு முன் ஒட்டக்கூத்தர் பாடிய
கலிங்கத்துப்பரணி
பெயர் முறை
பரணி நூல்களுக்குத் தோற்றவர்
பெயரிலேயே தலைப்புத் தரும்
வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின்
பெயரை வைத்து, இந்த நூல் "கலிங்கத்துப்
பரணி" என அழைக்கப்படுவதாயிற்று. தமிழில்
முதன் முதலில் எழுந்த பரணி நூல்
கலிங்கத்துப் பரணியே ஆகும்.

இதுவே பிற்காலப்
பரணி நூல்களுக்கு வழிகாட்டியாய் அமைந்த
நூலாகும். இது கலித் தாழிசையாற்
பாடப்பெற்றது. 599
தாழிசைகளை உடையது. காலம் (1078- 1118-
குலோத்துங்க சோழன் காலம்) பதினோராம்
நூற்றாண்டின் பிற்பகுதி.

பரணி
பரணி என்பது போரில் ஆயிரம்
யானைகளை வென்ற வீரனைப் பாடும்
சிற்றிலக்கிய வகை ஆகும். போரிலிருந்து மீண்ட
தலைமகன் பால் புலவியுற்ற
தலைமகளது ஊடலைத் தீர்க்க புலவர்கள்
வாயிலாவதும், புலவியாற்றிய பின்னர்,
தலைவன் சென்ற காட்டின்
கொடுமையையும் தலைவனின்
வீரத்தையும், அக்காட்டிலுள்ள பேய்கள்
காளிக்குச் சொல்லுவதையும்,
காளி பேய்களுக்கு உரைப்பதையும் எடுத்துச்
சொல்லும் வடிவுடன் பரணி
நூலானது அமையும். பரணி நாளில் பேய்கள்
கூடி நிணச்சோறு( இரத்தமும் இரைச்சியும் கலந்த
உணவு) அட்டு ( சமைத்து)
உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்து போரில்
வென்ற மன்னரைப் புகழும் புகழ்ச்சியைக்
கூறுவது. காளிக்குக் கூளிகள் கூறுவதாக
அமைவது.

நூலின் அமைப்பு முறை

கலிங்கத்துப்பரணியின் நூலமைப்பில் பின் வரும்
பொருள்கள் விளக்கப்படுகின்றன.
கடவுள் வாழ்த்து
போர்த்தலைவனாகிய குலோத்துங்கன்
நெடிது நின்று ஆட்சி செய்ய
வேண்டுமென கடவுளைத் துதித்துப்
பாடப்படுகிறது.

கடை திறப்பு
கலிங்கத்தின் மேல் படையெடுத்துச்
சென்ற வீரர்கள் வருவதற்குக் கால
தாமதம் ஆனதால் அதனைக்
கண்டு மகளிர் ஊடல்
கொண்டு கதவை அடைத்ததாகவும்,
அப்பெண்கள் மகிழுமாறும் ஊடல்
நீங்கிக் கதவைத் திறக்குமாறும் செய்ய,
தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர்
பற்றி கூறுவது போலவும் அமைந்தது.

காடு பாடியது

கலிங்கப் போர்க்களத்தில் நிணக்கூழ் சமைத்த
பேய்களின் தலைவியாகிய காளி உறையும்
இடமாகிய பாலயைச் சார்ந்த காட்டைப்
பற்றிக் கூறுவது. இதில் பாலை நில
வெம்மையின் கொடுமை சுவையுடன்
கூறப்பட்டுள்ளது.
கோயில் பாடியது
காளி உறையும் இடமாகிய காட்டில்
நடுவண் அமைந்துள்ள காளிக் கோயிலைப் பற்றிக்
கூறுவது. இதில் காளிக் கோயிலின்
அடிப்படை(அடிவாரம், அஸ்திவாரம்)
அமைத்தது, சுவர் அடுக்கியது, தூண்
நிறுத்தியது முதலான செய்திகளைக்
கூறுகிறது. குலோத்துங்கன் பல போர்க்
களங்களில் பெற்ற வெற்றிச்
சிறப்புகள் காட்டில் காணப்படும் பல
வகைக் காட்சிகளோடு தொடர்புப்
படுத்திக் கூறப்படுகிறது.
தேவியைப் பாடியது
காளிக் கோயிலைப் பற்றிக் கூறியபின் காளியைப்
பற்றிக் கூறுவது. காளியின் உறுப்புகள்
பற்றியும், குலோத்துங்க சோழனின் புகழும்
இடைஇடையே கூறப்படுகிறது.
பேய்ப்பாடியது
காளியைச் சூழ்ந்திருக்கும் பேய்களின்
இயல்புகள் கூறப்படுகிறது.

பேய்களின்
உறுப்பு நலங்கள் பற்றி நகைச்
சுவையோடு விளக்கப்படுகிறது. சில பேய்களின்
உறுப்பு நலங்கள்
குறைந்து காணப்படுவதாகவும் ,
குலோத்துங்கனின் பல போர்க்கள
வெற்றிகள் குறித்தும் கூறப்படுகிறது.
இந்திரசாலம்
பேய்கள் சூழ காளி அரசு வீற்றிருந்த
அமயத்தே ( அவையில்) இமயத்திலிருந்து வந்த
முது பேய் ஒன்று தான் கற்று வந்த இந்திர
சாலங்களை(மாய வித்தைகள்)க்
காட்டுவதாக நகைச்சுவையுடன்
கூறப்படுகிறது.
இராச பாரம்பரியம்
குலோத்துங்கனின் குடியின்
வரலாறு கூறப்படுகிறது. கரிகால் சோழன்
தொடங்கி சோழ
வரலாறு கூறப்படுகிறது
பேய் முறைப்பாடு
பரணிப்போர் நிகழ்வதற்கான முற்குறிகளைப்
பேய்கள் கண்டதகக் கூறுவது இப்பகுதி.
பேய்களின் பசிக்கொடுமை,
அப்பேய்களுக்கு ஏற்படும் சில நல்ல குறிகள்,
இமயத்தில் இருந்து பேய் தான் வந்த வழியில்
கலிங்கத்தில் கண்ட தீக்குறிகள், இவைகளைக்
கேட்டு கணிதப்பேய் கனவும் நனவும் கண்டு,
குலோத்துங்கனால் பரணிப்போர் உண்டு எனக்
கூறுவதும், பின்னர்
நிகழப்போவதை முன்னறிவிப்பாகக் கூறும்
முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
அவதாரம்
கலிங்கப்போர்த் தலைவனான குலோத்துங்கன்
சிறப்பை காளி பேய்களுக்குக் கூறுவது போல்
அமைக்கப்பட்ட இப்பகுதியில் குலோத்துங்க
சோழனின் பிறப்பு, வளர்ப்பு, இளவரசுப்பட்டம்,
முடி சூடியது முதலிய செய்திகள்
விளக்கப்படுகிறது. சாளுக்கிய குலத்தில்
பிறந்து தாய்க் குலமாம் சோழ
குலத்து அரசுரிமைப் பெற்றது ,
இளவரசராய் இருந்த போது வட திசை நோக்கிப்
போருக்கு எழுந்தது, சோழன் இறந்த சமயத்தில் சோழ
நாட்டை நிலைபெறுத்தி முடிசூடியது ,
பெரு மன்னனாய் சிறப்புற
ஆட்சி செய்தது,
பாலாற்றங்கரைக்கு நால்வகைப்
படையுடனும், தேவியருடனும், சிற்றரசர்கள்
சூழவும் புறப்பட்ட சிறப்பு, தில்லையிலும்,
அதிகையிலும் தங்கிச்
சென்று காஞ்சியை அடைந்தது ஆகிய
செய்திகள் கூறப்பட்டுள்ளன.
காளிக்குக் கூளி கூறியது
காஞ்சியை அடைந்த குலோத்துங்கண்
ஒரு சித்திரப் பந்தர் கீழ் அமைச்சர் முதலியோருடன்
வீற்றிருந்த சிறப்பும் சிற்றாரசர்கள் பலரும்
வந்து திறை செலுத்தியதும்,
திறை செலுத்தாத கலிங்க மன்னன் மேல்
குலோத்துங்கனின் ஆனைப்படி கருணாகரத்
தொண்டமான் நால்வகைப்
படையுடன் போருக்கெழுந்த இயல்பும்
கூறப்படுகிறது. பல ஆறுகளைக்
கடந்து கலிங்கம் அடைந்ததும்,
கலிங்கத்தை எரிகொளுவி அழித்ததும்,
அது கண்ட கலிங்கமக்கள் அரசனிடம்
முறையிட்டதும் , அவன்
வெகுண்டெழுந்ததும், அமைச்சர்
முதலானோர் அவனுக்கு அறவுரைப் பகர்ந்ததும்,
அதனை மதியாமல் கலிங்க மன்னன்
போருக்குச் சென்றதுமான
செய்திகள் விளக்கப்படுகிறது.

போர் பாடியது

கலிங்கப்பேய் காளிக்கு போரின்
இயல்பை கூறுவதாக அமைந்தது. நால்வகைப்
படையின் செயல்கள், தீவிரமான
போர்முறை , கருணாகரன் தன்
களிற்றை உந்தியதும் இரு பக்கப் படைகளும்
ஒருவரை ஒருவர் பொருத
செய்திகளும், இரு திறத்திலும்
நால்வகைப் படைகளும் பல அழிந்ததும், போரின்
கடுமைத் தாங்காமல் கலிங்க மன்னன்
ஓடி ஒளிந்ததும், அவனைப் பற்றிக்
கொணர தன்
படைகளோடு ஒற்றர்களையும்
கருணாகரத்தொண்டைமான்
அனுப்பிய செய்தியும், கலிங்க வீரர்கள்
ஒரு மலை உச்சியில் மறைந்து நிற்பதைப்
பற்றி அறிந்ததும்
அது மாலை வேளை ஆனதால் போரிடாமல்,
விடியும் வரை காத்துநின்று விடிந்த பின்
கலிங்கரை அழித்ததும், கலிங்க வீரர்கள்
உருக்குலைந்து நாற்புறமும் ஓடியதும்,
அங்கு தன் கவர்ந்த செல்வங்களுடன்
குலோத்துங்கன் பால்
சென்று பணிந்து நின்றதுமான
செய்திகள் அழகுபடக் கூறப்பட்டுள்ளன.

களம் பாடியது

போரைப் பற்றிச் சொல்லி முடித்த பேய்
காளியைப் போர்க்களம் காணுமாறு அழைக்க
காளி வந்து களத்தைக் கண்டு,
அக்காட்சிகளைப் பேய்களுக்குக்
காட்டுமாறு அமைந்துள்ளது. காட்சிகளைக்
காட்டிய பின்,
நீராடி கூழட்டு உண்ணுமாறுபேய்களைப்
பணிக்கிறாள் காளி. அங்கணமே பேய்கள்
பல் துளக்கி, நீராடி கூழ் சமைத்து உண்ணும்
இயல்பு கூறப்படுகிறது. பேய்கள் பாடும்
வள்ளைப் பாட்டில் குலோத்துங்கனின் புகழ்
பாடப்படுகிறது. முடிவில் பேய்கள்
தங்களுக்கு பரணிக் கூழ் அளித்த
குலோத்துங்கனை வாழ்த்துவதாக
கலிங்கத்துப் பரணி முடிகிறது.

____________________________

சிற்றிலக்கியங்கள் வாழ்வியலுக்குத்
தேவையான விழுமிய நோக்கம் எதையும்
உள்ளீடாகக் காட்டாமல்
பெரும்பாலும் இறைவனையும்
அரசரையும் போற்றுவதே இதற்குக் காரணம்
என்றும் கூறலாம். அதிலும் மகளிர்தம்
அங்க வருணனைகள் மிகைபடக்
கூறப்பட்டிருப்பதும் ஒரு காரணமாகும்.
ஆனால் மிகக் குறைவாகவே கிடைத்துள்ள
பழைய சிற்றிலக்கியங்களில் அரியதான
பல செய்திகள் மறைந்து கிடக்கின்றன.

சான்றாகக் கலிங்கத்துப் பரணி,
குலோத்துங்க சோழன் பூணூல்
அணிந்திருக்கிறான் என்று காட்டுகிறது.

பிராமண குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள்தாம் தங்கள்
மகனுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும்
பூணூல் அணிவிப்பர்.
அதை இரண்டாவது பிறப்பு என்று கருதுவர்.
இவ்வழியில் மூவேந்தரில் ஒருவன் இருந்ததை
'மங்கலநாண் என்ன முந்நூல்
பெருமார்பில்
வந்தொளிரப் பிறப்பிரண்டா
வதுபிறந்து சிறந்து பின்னர் (242)
என்று இப்பரணி நூல் காட்டுகிறது. மேலும்
குலோத்துங்கன் 'வேதங்கள் நான்கினையும்
வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றவன் '
என்றும், அவன்
மழை பெய்வதற்காக வேள்விகள்
செய்ததை 'தாங்காரப்
புயத்தபயன் தண்ணளியால்
புயல்வளர்க்கும் ஓங்கார மந்திரமும்
ஒப்பில நூறாயிரமே ' என்றும் கலிங்கத்துப்
பரணி கூறுகிறது.
இந்நூலை இயற்றிய
சயங்கொண்டார் 'பரணிக்கோர்
சயங்கொண்டான் ' எனப்
போற்றப்படுகிறார். அவர் ஒரு தமிழ்
வேந்தனை இங்ங்கனமாகக்
காட்டியது எனெனப் பல
ஆய்வாளர்கள்
ஆய்வு மேற்கொண்டனர்.
'தஞ்சைச் சோழர்கள் தங்களை வடநாட்டுச்
சத்திரியர் வழியில் வந்தவராகக் கருதிக்
கொண்டிருந்தனர்.
எனவே அம்மன்னர்கள் வட நாட்டுச்
சத்திரியர் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தனர் '
என்று வித்துவான் திரு பெ.
பழனிவேல் பிள்ளை கூறுவது ஆய்வுக்குக்குரிய
ஒன்றாகும்.

இந்நூலில் சயங்கொண்டார்
சோழரின் பண்டைய மரபைக்
கூறும்பொழுது வடநாட்டுச்
சத்திரியர்களான இட்சுவாகு,
மந்தாதா, முழுகுந்தன், சிபி போன்றோரைப்
பாடி அவர்தம் வழியில் சோழர் தோன்றினர்
என்கிறார்.

சோழர் அரசவையில் அவைக்களப் புலவராய்
இருந்த ஒட்டக் கூத்தரும் தான் பாடிய
மூவர் உலாவில் இவ்வாறே சோழர்
மரபு கூறுகிறார்.
முதற்குலோத்துங்கன் 1078 முதல் 1118 முடிய
அரசாண்டவன். இந்நூல்
சயங்கொண்டாரால்
பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
இயற்றப்பட்டது என திரு கா. சு.
பிள்ளை குறிப்பிடுகிறார்.
'பரணி ' எனும் நட்சட்திரம்
வெற்றிக்குரியதாகக்
கருதப்படுகிறது. 'பரணி பிறந்தவன்
தரணியாள்வான் '
என்று பழமொழி வழங்கி வருகிறது.

எனவேதான் சோழன் கலிங்க நாட்டின்
மீது படை கொண்டு சென்று பெற்ற
வெற்றியைக் கொண்டாட
பரணி எனும் பெயரை இந்நூலுக்குச்
சூட்டி உள்ளார்கள்.
ஆயிரம் யானையைப் போரில் வென்ற
மானவீரனுக்கு எடுப்பது பரணி என்று கூறுவதிலிருந்து இதன்
பாட்டுடைத்தலைவன் போரில் ஆயிரம்
யானைகளை வென்றிருக்க வேண்டும்
என்பது புலனாகிறது. மேலும்
'காடு கிழவோன் பூத மடுப்பே,
தாழி பெருஞ்சோறு தருமனாள்
போதமெனப்
பாகுபட்டது பரணி நாட்பெயரே '
என்று திவாகரம் கூறுகிறது.

பரணி நட்சத்திரத்திற்குத்
தெய்வமாகக் காளியும் யமனும்
கூறப்படுவதால் இந்நூலில் அவர்களும்
போற்றப்படுகின்றனர்.
தமிழ் இலக்கியங்களில் நூலின் கதையைக்
கூறும் முறையில் கலிங்கத்துப்
பரணி மாறுபட்டு நிற்கிறது. போருக்குச்
சென்ற வீரர்கள் காலம்
தாழ்த்துவதால் அவர்தம் மனைவியர்
ஊடிக் கதவடைக்கின்றனர்.
சயங்கொண்டார் கலிங்கப்
போர்ச் சிறப்பைக் கேட்கக்
கதவு திறக்குமாறு வேண்டிக் கடைத்
திறப்பு பாடுகிறார்.

இப்பகுதியில் மங்கையரின் அங்க
லட்சணங்கள்
சற்று மிகையாகவே புனைந்துரைக்கப்பட்டிருக்கின்றன.
எனவேதான் கண்ணதாசன்
இப்பகுதியை மட்டும்
தேர்ந்தெடுத்து உரை எழுதியுள்ளார்.

மொத்தம்
பதின்மூன்று பிரிவுகளாக உள்ள
இந்நூலில் எட்டாம் பிரிவான
இராசபாரம்பரியத்திலும் பத்தாம்
பிரிவான அவதாரத்திலும்தான்
குலோத்துங்கன் புகழ் விரிவாகப் பாடப்
படுகிறது.
மற்றவற்றில் காடும், காளீ கோயிலும்,
காளியும், பேய்களும், போரும் காணப்
படுகின்றன. மன்னன் புகழைக் கூற
வந்தவர் நயமும் சுவையும் தருவதற்காக
இப்படி எழுதி இருக்கலாம்.
இந்நூலில் பேய்கள் பேசும்
அளவிற்க்கு வேறு எந்த இலக்கியத்திலும்
அவை காணப்படுவதில்லை. அவை கதையைக்
கூறி நகர்த்திச் செல்கின்றன.
குலோத்துங்கனைப் பாடுகின்றன.

காளிக்குப் பூசை செய்கின்றன.
பிணக்குவியலின் மீது, யானையின்
உடலாகிய பானையில் வீரர்களின்
மூளைத்தயிர் கொண்டு, பல்
என்னும் வெங்காயமும், நகம்
எனும் உப்பும் இட்டு, கலிங்கர்
பற்களை அரிசியாக்கிக் கூழ் சமைக்கின்றன.
பேய்ப்பரணி எனும் அளவிற்குப் பேய்களின்
உடல் அமைப்பு வர்ணிக்கப் படுகிறது.

கால் மூடப் பேய், கை மூடப் பேய், குருட்டுப் பேய்,
ஊமைப் பேய், செவிட்டுப் பேய், கூன் பேய்
என்று பல வகைப் பேய்களைக் காட்டும்
சயங்கொண்டார் அவற்றைச்
சமய வாரியாகவும் பிரிக்கிறார்.
'பவதி பிட்சாந்தேகி ' எனும் பார்ப்பனப்
பேய், உயிரைக் கொல்லாச்
சமணப் பேய், முழுத்தோல் போர்க்கும் புத்தப் பேய்
என்று காட்டுபவர் சைவ, வைணவப்
பேய்களைக் காட்டவில்லை. இவை தமிழ்
நாட்டுச் சமயங்கள் என்ரு கூறாமல்
விட்டார் போலும்.
முற்காலத்தில் பொன்,
வெள்ளி, மண் ஆகியவற்றால்
செய்யப்
பட்டபாத்திரஙளே உணவு உள்
கலங்களாக இருந்தன.

இலையில்
உணவு உண்ணும் பழக்கம்
பிற்காலத்தது என்று திரு. பெ.
பழனிவேல்பிள்ளை கூறுகிறார்.
கீழே ஆடை விரித்து அதன்மேல் உண்கலம்
வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
அவ்வாடையைப்
பாவாடை என்று பரணி காட்டும்
'பதம் பெற்றார்க்குப் பகல்
விளக்கும்
பாவாடையுமாக் கொள்வீரே '
வென்காயத்தைக் கறித்துக்
கொண்டுண்ணும் பழக்கம்
'உள்ளி கறித்துக்
கொண்டுண்ணீரே ' என்று பேய்
கூறுவதால் அறியப்படுகிறது.

பேருந்தில் செல்கையில்
சிலருக்கு குமட்டல் வரும். அது மறையத்
தலை மயிரை முகர்ந்து பார்ப்பது ஒரு மருத்துவ
முறையாகும். பேய்கள் நிறைய
உண்டு விட்டதால் குமட்டல்
வருகிறதாம். அது தீரப் பூதத்தின்
மயிரை மோந்து பார்க்கச்
சொல்வதாக
'செருக்கும் பேய்காள் பூதத்தின்
சிரத்தின் மயிரை மோவீரே '
என்ற அடிகள் காட்டுகின்றன.
குலோத்துங்கன் புரிந்த வடநாட்டுப் போர்,
துங்கபத்திரைப் போர், அளத்திப் போர், மைசூர்ப்
போர், பாண்டியர் ஐவரை வென்றது,
விழிஞம், காந்தளூர்ச் சாலை ஆகிய
துறைமுகங்களில் சேரரை வென்றது போன்ற
வரலாற்றுக் குறிப்புகளையும் கலிங்கத்துப்
பரணி காட்டுகிறது.

இலக்கிய நயமும், ஆங்காங்கே நூலில்
பல இடங்களில் மிளிர்கின்றது. கணவன்
உடலைத் தரை மகள் தாங்காமல்
தலைவி தாங்குகிறாள். அவன் உயிர்
விட்டு வானுலகம் சென்றால்
அங்குள்ள மகளிர்
அவனை விரும்புவார்கள். அதைத் தடுக்க
அவனுக்கு முன் அவள் உயிர்
விட்டு வானுலகம்
சென்று காத்திருக்க உயிர்
விடுகிறாள்.

ஏழைகளும் விருந்தினரும் வந்து உண்ணும்
போது இல்லத்தாள் மகிழ்வது போல் பருந்தும்
கழுகும் தன் உடலை தின்ன வீரர்கள் முகம்
மலர்ந்து கிடக்கிறார்களாம்.
யார் திறை கொடுக்கவில்லை எனப்
படையெடுக்கப் பட்டதோ, அக்கலிங்க
நாட்டு மன்னன் பெயர் நூலில்
இல்லாதாதும், அவன் என்ன
ஆனான் என்பது கூறப் படாததும்
பெரிய குறை.

நூலைப் படித்து முடித்ததும் சோழன் புகழோ,
வரலாற்றுக் குறிப்புகளோ, இலக்கிய
நயங்களோ மனதில் நிற்காமல்
பேய்களே முழுக்க முழுக்க வியாபித்துக்
கொண்டுள்ளன.

வெள்ளி, 21 மார்ச், 2014

குறுந்தொகை (எட்டுதொகை நூல்)

குறுந்தொகைப் பாடல்களின்
சிற்றெல்லை நான்கு அடி,
பேரெல்லை எட்டு அடி. அகவற்பாவின்
அமைப்பில் சுருங்கிய அடிவரையறையைக்
கொண்ட பாடல்
தொகுதி என்பதால்
குறுந்தொகை என்று பெயர்
பெற்றது.

குறுந்தொகை நூலின்
செய்யுள் தொகை கடவுள்
வாழ்த்தை விடுத்து 401. இதனுள் 307, 391 ஆம்
செய்யுட்கள் ஒன்பது அடி உடையன.
எட்டு அடிப் பேரெல்லையைக் கடந்துள்ள இந்த
இரண்டு பாடல்களும் ஐயத்திற்கு இடமானவை.

'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத்
தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்'
என்பது பழங் குறிப்பு. இதனைத்
தொகுப்பித்தார் பெயர்
தெரியவில்லை. 10 பாடல்களின் ஆசிரியர்
பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய
பாடல்களைப் பாடியவர்களின்
தொகை 205.

கடவுள்வாழ்த்து

தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளி,
குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர்
நெடு வேல்,
சேவல்அம் கொடியோன் காப்ப,
ஏம வைகல் எய்தின்றால்-உலகே.
பாரதம் பாடிய பெருந்தேவனார்

1. குறிஞ்சி

செங்களம் படக்
கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங்
கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
தோழி, காந்தள் கையுறையை மறுத்தது
திப்புத்தோளார்

2. குறிஞ்சி

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்
தும்பி!
காமம் செப்பாது,
கண்டது மொழிமோ;
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி,
தலைமகளை இயற்கைப் புணர்ச்சிகண்
இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின்
நீக்குதற்பொருட்டு, மெய்
தொட்டுப் பயிறல் முதலாயின அவள்
மாட்டு நிகழ்த்திக் கூடி, தனது அன்பு தோற்ற
நலம் பாராட்டியது
இறையனார்

3. குறிஞ்சி

நிலத்தினும் பெரிதே; வானினும்
உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே.
தோழி தலைவனை இயற்பழிக்கத் தலைவி எதிராக
இயற்பட மொழிந்தது
தேவகுலத்தார்

4. நெய்தல்

நோம், என் நெஞ்சே நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.
தலைவி பற்றிக் கவன்ற தோழிக்குத் தான்
ஆற்றியமை புலப்படக் கூறியது
காமஞ்சேர் குலத்தார்

5. நெய்தல்

அதுகொல், தோழி! காம நோயே-
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை,
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
பிரிவுத் துயரத்தில் கண் உறங்காமை
நரி வெரூ உத்தலையார்

6. நெய்தல்

நள்ளென்றென்றே, யாமம்;
சொல்அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.
தாமரையில் அமர்ந்த பிரமன் (பிரமனார்)
வரைவிடை பொருளுக்காகத் தலைவன்
பிரிந்தான். தலைவி நடு இரவில் உலகுள்
அனைவரும் துயிலத் தான் மட்டும்
துயிலாமை பற்றி வருந்தியது
நெய்தல் பதுமனார்

7. பாலை

வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே-ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக்
கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.
பாலை கண்டோர் கூற்று
பெரும்பதுமனார்

8. மருதம்

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறி, தம்
இல்,
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல,
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட
காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார்
கேட்பச் சொல்லியது
ஆலங்குடி வங்கனார்

9. நெய்தல்

யாய் ஆகியளே மாஅயோளே-
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் செப்பில் தமிய
வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே;
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்
இன மீன் இருங் கழி ஓதம்
மல்குதொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணிக் கரப்பாடும்மே.
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது
சுயமனார்

10. மருதம்

யாய் ஆகியளே விழவு முதலாட்டி;
பயறு போல் இணர பைந் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.
ஓரம்போகியார்

11. பாலை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும்
கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது,
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.
தலைமகள் தன் நெஞ்சிற்குச்
சொல்லுவாளாய்த் தோழி கேட்பச்
சொல்லியது
மாமூலனார்

12. பாலை

எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும், இவ் அழுங்கல்
ஊரே.
"ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக்
கிழத்தி உரைத்தது
ஓதலாந்தையார்.

13. குறிஞ்சி

மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த்
துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான்
ஆற்றுவித்துப் பிரிய, வேறு பட்ட
கிழத்தி தோழிக்கு உரைத்தது
கபிலர்

14. குறிஞ்சி

அமிழ்து பொதி செந் நா அஞ்ச
வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில்
மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே!
பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,
"நல்லோள் கணவன் இவன்" எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
"மடன்மா கூறும் இடனுமார் உண்டே"
என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன்,
"மடலேறுவல்" என்பதுபடச் சொல்லியது
தொல்கபிலர்

15. பாலை

பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப்
பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
உடன்போயின பின்றை,
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள்.
நிற்ப, செவிலித் தாய்
நற்றாய்க்கு அறத்தொடு நின்றது
ஒளவையார்
16. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்
பொன் புனை பகழி செப்பம்
கொண்மார்,
உகிர் நுதி புரட்டும் ஓசை போல,
செங் காற் பல்லி தன் துணை பயிரும்
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள்
ஆற்றாமை கண்டு, தோழி கூறியது
பாலை பாடிய பெருங்கடுக்கோ

17. குறிஞ்சி
மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப-காமம்
காழ்க்கொளினே.
தோழியற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன்
தோழி குறைமறாமல் கூறியது
பேரெயின் முறுவலார்

18. குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு,
இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத்
தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது
கபிலர்

19. மருதம்
எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து
எல்லுறும் மெளவல் நாறும்
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண்
தலைமகன் சொல்லியது
பரணர்

20. பாலை
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உருவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கோப்பெருஞ்சோழன்